ஓ.பன்னீர் செல்வம் பாதுகாப்புக்கு புதிதாக 10 பாடிகார்டுகள்!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாதுகாப்புக்கு புதிதாக 10 பாடிகார்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பாதுகாப்புக்காக 10 பாடிகார்டுகளை புதிதாக நியமித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சசிகலா தரப்பின் கை நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. வேகமாக பலவீனமடைந்து வருகிறது. முதல்வர் பதவியைக் கைப்பற்ற சசிகலா தரப்பு கடுமையாக மோதி வரும் நிலையில் மக்கள் துணையுடன் அதை முறியடிக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

சசிகலா தரப்புடன் மோதல் வலுத்து வந்ததைத் தொடர்ந்து முதல்வரின் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவரது பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸாரும் நியமிக்கப்பட்டனர். நாளுக்கு நாள் அவரது வீட்டுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. தொண்டர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருக்கிறது. பல்வேறு தலைவர்களும் வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் இந்த கூட்டத்திற்குள் சசிகலா தரப்பினர் ஊடுறுவி இடையூறு செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எளிமையானவர் என்றாலும் கூட தற்போது நிலைமை சரியாக இல்லை என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அவரது நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள் தொடர்ந்து அவரை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தற்போது முதல்வரின் பாதுகாப்புக்காக புதிதாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மெய்க்காப்பாளர்கள் போல அவர்கள் செயல்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை ஓ.பி.எஸ் தரப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் போலீஸார் பாதுகாப்புடன் தற்போது இந்த பாடிகார்டு பாதுகாப்பும் முதல்வருக்கு கூடுதலாக சேர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications