நாகை - கடலூர் கடல்பகுதியில் விமானத்தின் சமிக்ஞை? தேடுதல் வேட்டையில் நீர்மூழ்கிகள்!
சென்னை: சென்னையில் ஆபரேஷன் ஆம்லா பாதுகாப்பு ரோந்துப் பணியில் காணாமல் போன சிறிய ரக விமானத்தின் பாகத்திலிருந்து நாகை-கடலூர் கடல் பகுதியிலிருந்து சமிக்ஞை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களும் இத் தேடுதல் வேட்டையில் மும்முரமாகியுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் புறப்பட்ட சிறிய ரக விமானம் இரவு 9.30 மணி அளவில் ரோந்து பணிகளை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பி இருக்க வேண்டும்.

புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையில் பறந்து கொண்டிருந்த போது விமானம் திடீரென மாயமானது. கடைசியாக திருச்சி ரோடாரில் விமானத்தில் சிக்னல் பதிவாகி உள்ளது. அதன் பின்னர் விமானம் எங்கு சென்றது என்பது தெரியவில்லை.
இதையடுத்து தமிழக கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மத்திய பாதுகாப்பு படை ஐ.ஜி. சர்மா ஆகியோர் மாயமான விமானத்தை தேடிக்கண்டு பிடிக்கும் பணியை தொடங்கினர்.
விமானம் மாயமானதால் ஆபரேசன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகை ரத்து செய்யப்பட்டது. இதற்கு ஆயத்தமான அத்தனை அதிகாரிகளும், உள்ளூர் போலீசாரும், விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான 8 கப்பல்கள், அதிநவீன 10 படகுகள் ஆகியவை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய இந்த தேடுதல் வேட்டை தொடர்ந்து நேற்று இரவும் விடிய விடிய நடைபெற்றது.
இதுதவிர தமிழகம் முழு வதும் 14 கடலோர மாவட்டங்களும் உஷார்படுத்தப்பட்டன. மீனவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாகை- கடலூர் கடல்பகுதியில் விமானத்தின் பாகம் ஒன்றிலிருந்து சமிக்ஞை கிடைத்துள்ளதுதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் 10 ரோந்து கப்பல்கள், 4 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் குட்டி விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேபோல் மாயமான விமானம் கடலுக்கடியில் மூழ்கி இருக்கலாம் என்பதால் நீர்மூழ்கிக் கப்பல்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications