கோவை கல்லூரி மாணவியை சீரழித்த வழக்கு- ஒருவருக்கு ஆயுள், 4 பேருக்கு 10 ஆண்டு சிறை
கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2008ம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்த அவரை 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிம் ஹக்கீம், கார்த்திகேயன், பிரகாஷ், முகமது அனீஷ், ஷாஜ் கிங்ஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஆனந்தராஜ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
குற்றவாளிகளில் ஜிம் ஹக்கீமுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் கார்த்திகேயன், பிரகாஷ், முகமது அனீஷ், ஷாஜ் கிங்ஸ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.