'நீரா'விற்கு எப்போது அனுமதி?... சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்பனை செய்ய விவசாயிகள் திட்டம்!
தென்னை மரங்களில் இருந்து நீரா எடுக்க அரசு இந்த மாத இறுதியில் ஆணை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நீரா பானங்களை சுப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வைக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
Recommended Video

கோயம்புத்தூர் : தென்னை விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் நீரா பானத்திற்கு இந்த மாத இறுதியில் அரசு அனுமதியளித்து ஆணை பிறப்பிக்கும் என்று தெரிகிறது, இதனால் நீரா பானத்தை சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்கு வைக்கலாம் என்று விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் நெல், கரும்பு வாழை உள்ளிட்ட மானாவாரி பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டது. பனை மரங்களும் பட்டுப்போன நிலையில் தேங்காய் விற்பனையில் கைகொடுத்து வந்த தென்னை விவசாயமும் கோயம்புத்தூர் பகுதிகளில் நீரின்றி வறண்டு போனதால் பாதித்தது. இந்நிலையில் இருக்கும் கொஞ்சம் தென்னை மரங்களை வைத்து விவசாயிகள் லாபம் சம்பாதிக்கும் விதமாக அண்டை மாநிலமான கேரளாவைப் போல தென்னை மரத்தில் இருந்து நீரா பானத்தை இறக்கி விற்பனை செய்ய விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீரா என்பது பதநீர் போல ஒரு இனிமையான உடல்நல பானமாகும். வெடிக்காத பாளைகளில் இருந்து வடித்தெடுக்கப்படும் வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த நீரா பானம் தாது உப்புகளும், வைட்டமின் சத்துகளும் நிறைந்தது. தென்னம்பாளையில் இருந்து வெடிக்கும் நிலையில் இருக்கும் போது நீரா வடித்து எடுக்கப்படும்.

விவசாயிகள் கோரிக்கை
நீரா கசிந்து சொட்ட 15 நாட்களை வரை பிடிக்கும், ஆண்டு முழுவதும் தென்னை மரங்களில் இருந்து இந்த பானம் கிடைக்கும். நாளொன்றிற்கு ஒரு மரத்தில் இருந்து 2 லிட்டர் நீரா கிடைக்கும். வறட்சியால் ஏற்கனவே தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,எஞ்சியிருக்கும் தென்னை மரங்களை காக்கவும், தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கவும் நீரா பானத்தை இறக்குவதற்கு அரசு அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவம்பர் இறுதியில் அனுமதி
நீரா பான இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று உறுதியளித்த முதல்வர் பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதத்தில் இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளார். இதனிடையே இந்த மாத இறுதியில் நீரா பானத்திற்கு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிடும் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கள் விற்பனையை தவிர்க்க
சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் நீரா பான இறக்குமதிக்கு அரசே அங்கீகாரம் அளிக்க உள்ளது. மேலும் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆணைமலை பகுதியில் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் நீரா பானத்தில் இருந்து தயாரிக்கும் பொருட்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தும் திட்டங்களை கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் திட்டம்
இந்நிலையில் இந்த மாதத்திலேயே அரசு நீராவிற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு சட்ட ஆணை பிறப்பித்தால் மட்டுமே வெளிநாடுகளுக்கு நீராவை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர்.

சட்டப்பூர்வ அனுமதி
மேலும் நீரா பானத்திற்கு அரசு அனுமதி அளித்தால் மாநிலம் முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் இவற்றின் விற்பனையை தொடங்கலாம் என்றும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். ஜனவரி மாதம் முதல் நீரா அதிக அளவில் மரங்களில் கிடைக்கும் என்பதால் அரசு காலம் கடத்தாமல் நீரா எடுப்பதற்கான சட்டப்பூர்வ அனுமதியை அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications