பள்ளிக்கூடம் 2.0 மாஸ்.. நேராக ஸ்கூலுக்கே போகுதாமே போலீஸ்.. ஆச்சர்யத்துடன் பார்க்கும் கோவை
கோவை: கோவை ஊரகக் காவல் துறை பள்ளிக்கூடம் 2.0 திட்டத்தை ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளதாக கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறினார்.
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று (வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பள்ளிக் குழந்தைகளுக்கு சிறந்த சூழலை உருவாக்க பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை கோவை மாவட்ட ஊரகக் காவல் துறை கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தின் படி பெண் போலீசார் பள்ளிகளுக்கு சென்று பள்ளி குழந்தைகளுடன் உரையாடி பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் 1,318 பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். கடந்த ஆண்டில் இந்த விழிப்புணர்வு மூலமாக 130 குற்றங்களை தடுத்தோம். இந்த ஆண்டிலும் பள்ளிக்கூடம் 2.0 திட்டத்தை நாங்கள் தொடங்கப் போகிறோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் எண்பது பெண் போலீசார் செல்வார்கள்.
அப்படி செல்லும் பெண் போலீசார் கையோடு ப்ரொஜெக்டர்களை எடுத்துச் செல்வார்கள் மற்றும் ஆடியோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்

40 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்று தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ப்ரொஜெக்டர் திட்டம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 1,318 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 2.5 லட்சம் மாணவர்களிடமும் பெண் உதவி மைய அதிகாரிகள் கலந்துரையாடுவார்கள்.
அதன் மூலம்ட பள்ளிக்கூடம் திட்டம் குறித்து பள்ளி மாணவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றுள்ளோம். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்று வரும்போது கார்ட்டூன்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை மாணவர்கள் எதிர்பார்ப்பது எங்களுக்குத் தெரிய வந்தது. பெண் போலீசார் கார்ட்டூன்கள், ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை ப்ரொஜெக்டர்கள் மற்றும் திரைகளைப் பயன்படுத்தி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். 10 வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு ஊரக காவல்துறை மூலம் அடிப்படை தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
கோவை மாவட்டத்தில் 40 அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தற்காப்புப் பயிற்சி வழங்க போகிறோம். இதற்காக நாங்கள் ஒரு தனியார் தற்காப்பு பயிற்சி நிறுவனத்துடன் இணைந்துள்ளோம். எங்கள் பயிற்சி பெற்ற காவலர்கள் மற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் 40 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க உள்ளார்கள். மாணவர்களுக்கு நான்கு முதல் ஆறு முறை பயிற்சி அளிக்கப்படும்.
ஜூலை 15ம் தேதி ஊரக காவல் துறை சார்பில் போதைப்பொருள் இல்லா கோவை என்ற திட்டத்தை தொடங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 126 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1.25 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். எங்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கல்லூரிகளுக்கு அனுப்ப போகிறோம். அவர்கள் நடப்பு கல்வியாண்டில் ஒவ்வொரு மாணவரையும் சந்திப்பார்கள். சந்தித்து போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். கோவை மாவட்டத்தில் போதைப்பொருளால் பாதிக்கப்படக்கூடிய 13 கல்லூரிகளை கண்டறிந்துள்ளோம். முதலில் 13 கல்லூரிகளில் கவனம் செலுத்த உள்ளோம்.
கடந்த ஆண்டு கோவை மாவட்ட அளவில் 226 சிறார் பாலியல் பலாத்கார துன்புறுத்தல் தொடர்பாக போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளது. நடப்பாண்டில் இதுவரை கோவை மாவட்ட அளவில் 88 போக்சோ வழக்குகள் பதிவாகி இருக்கிறது" இவ்வாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறினார்












Click it and Unblock the Notifications