சென்னையில் பரிதாபம்.. போலீசுக்கு பயந்து வேகமாக பைக் ஓட்டிய கல்லூரி மாணவன் பலி!
சென்னையில் வேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை: சென்னையில் போலீசாருக்கு பயந்து வேகமாக பைக்கை ஓட்டிய கல்லூரி மாணவர் ஸ்பீட் பிரேக்கரில் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, நம்மாழ்வார் பேட்டை சுப்புராயன் தெருவில், சலூன் கடை நடத்தி வருபவர் நீல கிருஷ்ணன். இவரது 2வது மகன் முகிலன். மீனாம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரில் பி.ஏ., படித்து வந்தார். இவர், அதிகாலை 2 மணிக்கு அவரது நண்பர்கள் கிஷோர், சந்தோஷ் ஆகியோருடன் தெருவில் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் மற்றொரு நண்பரது பைக்கை வாங்கி கொண்டு சேத்துப்பட்டு பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்றனர். பைக்கை முகிலன் ஓட்டினர். அவருக்கு பின்னால் கிஷோரும், சந்தோஷும் உட்கார்ந்திருந்தனர். அவர்களது பைக் கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு கீழ்ப்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
முகிலனிடம் லைசென்ஸ் இல்லாததால் போலீசாரை பார்த்ததும் வண்டியை திருப்பியுள்ளார். கிஷோர், சந்தோஷ் பைக்கில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து போலீசாரிடம் சிக்க கூடாது என வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளார் முகிலன். ஆம்ஸ் சாலையில் வேகமாக வரும்போது ஸ்பீட் பிரேக்கரில் தாண்டும் போது, நிலை தடுமாறி தலைக்குப்புற கீழே விழுந்தார். ஹெல்மெட் அணியாததால் அவரின் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.