நெல்லை: கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு... பதற்றம்- போலீஸ் குவிப்பு
நெல்லை: கடையநல்லூர் அருகே ரவுடிகள் அட்டகாசத்தால் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவிரான அப்ரானந்தத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இருவரது ஆதரவாளர்களும் அவ்வப்போது மோதி கொள்வர்.
இந்த நிலையில் நெட்டூர் அருகே உள்ள மேலக்குத்தாப்பாஞ்சனை சேர்ந்த தொழிலாளர்கள் முத்து, தங்கராஜ் ஆகியோர் வெளியூருக்கு சென்று விட்டனர். இருவரது வீட்டிலும் பெண்கள் மட்டுமே இருந்தனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கண்ணன் உள்பட 9 பேர் வீடுகளை அடித்து நொறுங்கி சேதப்படுத்தினர். அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் அந்த கும்பல் மரக்கிளைகளை வெட்டி சாய்த்து கூச்சல் போட்டப்படி சென்றது. அப்பகுதியில் உள்ள கடைகளையும் அடித்து நொறுக்கினர். இதை அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் தட்டி கேட்டார். இதையடுத்து அவரை அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர். அதில் படுகாயம் அடைந்த அவர் அம்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் டிஎஸ்பிக்கள் ஆலங்குளம் பிச்சையா, சேரன்மகாதேவி ராஜா, கடையம் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி அங்கு அட்டகாசம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த ரவடிகள் அட்டகாசத்தில் பொதுமக்கள் பயத்தில் உறைந்துள்ளனர். இதனால் அங்கு போலீசார் குவி்க்கப்பட்டுள்ளனர்.