தியாகு உண்ணாவிரதம்.. கைவிட நடவடிக்கை கோரி கருணாநிதிக்கு மன்மோகன்சிங் கடிதம்

இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமர் மன்மோகன் சிங்கை, தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்கின்ற கோரிக்கையினை வற்புறுத்தி கேட்டுக்கொண்டார்.
4 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டு போரின்போது, ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கை தமிழர்களின் உயிரைப் பறித்த, சிங்கள இனவெறி அரசு நடத்தும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற தமிழகத்தின் ஒருமித்த குரலுக்கு பிரதமர் செவி சாய்க்கவேண்டுமென்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் - மாணவர்களும் - உலகத் தமிழ் இன அமைப்புகளும் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து போராடி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த 12 நாட்களுக்கு மேல் இதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் தோழர் தியாகுவின் உடல் மோசமாகி வரும் நிலை பற்றியும், விரிவாக எடுத்துரைத்தார்.
இதனை கவனமுடன் கேட்டறிந்த பிரதமர் மன்மோகன் சிங், இந்த பிரச்சினை குறித்து தி.மு.க. மற்றும் தமிழக மக்களுடைய உணர்வுகளை மதித்து உரிய நல்ல முடிவுகளை எடுப்போம் என்றும்; தி.மு.க. தலைவர் கருணாநிதி தலையிட்டு, உண்ணாவிரதம் இருந்து வரும் தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications