சிலை செய்ததில் மோசடி.. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்!
சிலை முறைகேடு வழக்கில் கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை: சிலை முறைகேடு வழக்கில் கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார்.

ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு, டிஎஸ்பி வீரமணி தலைமையிலான குழு, சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை முறைகேடு பற்றி விசாரணை நடத்தியது. சில வாரங்களுக்கு முன்பு, ஐஐடி நிபுணர் குழு மூலம், சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில், 5 புள்ளி 45 கிலோ அளவிற்கு தங்கம் இருந்திருக்க வேண்டிய நிலையில், பொட்டுத்தங்கம் கூட சிலையில் இல்லை என, ஐஐடி நிபுணர் குழு ஆய்வில் தெரியவந்தது.
இந்த வழக்கில் சிலை வடிவமைப்பு குழுவின் தலைவராக இருந்து, தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக உள்ள கவிதா சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரி கவிதா ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது கவிதாவை கைது செய்ததற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கவிதாவை கைது செய்ததற்கான ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரியான கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கவிதா திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் தேவைப்படும் போது கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications