திரும்பவும் ‘மோதிரத்தால்’ சிக்கல்... என்ன செய்யலாம் ம.ந.கூட்டணி தலைவர்கள் குழப்பம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அக்கட்சிக்கு மோதிரம் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனால் பெரும் குழப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
தேமுதிக - மக்கள்நலக்கூட்டணி - தமாகா ஆகிய கட்சிகள் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில் மக்கள் நலக்கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது.
தேர்தல் சின்னமாக அக்கட்சிக்கு மோதிரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மோதிரம் பரிசு...
அதனைத் தொடர்ந்து வைகோ, திருமாவளவனுக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அளித்தார். அதை எப்போதும் கையிலேயே அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் அன்புக் கட்டளை இட்டிருந்தார். அதுவரை யார் அளித்த மோதிரத்தையும் அணியாத திருமாவும், வைகோவின் அன்புப் பரிசை கைகளில் அணிந்து கொண்டார்.

பாக்கெட்டில் பத்திரம்...
ஆனால், சில நாட்களிலேயே திருமாவின் கையில் இருந்த மோதிரம் காணாமல் போனது. இதனால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே மோதல் என்ற செய்தி வேகமாகப் பரவியது. இதைக் கேட்டுப் பதறிப்போன திருமா, மோதிரத்தை பத்திரமாக சட்டைப் பாக்கெட்டில் வைத்திருப்பதாக விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

தேர்தல் சின்னம்...
இந்நிலையில் மோதிரம் வாயிலாக மக்கள் நலக்கூட்டணிக்கு வேறொரு பிரச்சினை தலைதூக்கியுள்ளது. அதாவது விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மோதிரம் சின்னத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சுயேட்சைகளுக்கும்...
ஆனால், மோதிரம் சின்னம் விடுதலை சிறுத்தைகளுக்கு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் சுயேட்சைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாத தொகுதிகளில் போட்டியிடும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சறுக்கல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குழப்பம்...
ஏனெனில் மோதிரம் விடுதலை சிறுத்தைகளின் சின்னம் என நினைத்து பல தொகுதிகளில் வாக்காளர்கள் சுயேட்சைகளுக்கு வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கிறது. இதனால், எப்படி இந்த குழப்பத்தை சமாளிப்பது என்ற யோசனையில் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் ஆழ்ந்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications