காங். தலைமை உத்தரவிட்டால் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி: நடிகை நக்மா அறிவிப்பு
சென்னை: காங்கிரஸ் கட்சி தலைமை உத்தரவிட்டால் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையும் தமிழகம், புதுவை மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான நக்மா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு இணைந்த நடிகை நக்மாவுக்கு கடந்த வாரம் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் நக்மா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சென்னை வந்துள்ள அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூய்மையான அரசியலே தமிழகத்திற்கு தேவை. அத்தகைய அரசியலை கொடுக்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளது.
காமராஜர் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தூய்மையான அரசியலை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சிறந்த அரசு இங்கே ஏற்பட வேண்டும். அனைத்துப் பெண்களும் முன்னேற்றம் காண வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே எங்கள் குறிக்கோள். அதற்காகவே பணியாற்றி வருகிறோம். கட்சியை முன்னேற்றுவது, வலுப்படுத்துவது குறித்து நாங்கள் பேசி வருகிறோம். எனவே தற்போது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த கேள்விக்கு இடமில்லை.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. இருப்பினும் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் அதையும் ஏற்பேன்.
இவ்வாறு நக்மா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications