நரசிம்மராவின் அமைதியால்தான் காங்.ஆட்சி வீழ்ந்தது: எடப்பாடிக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ எச்சரிக்கை!
நரசிம்மராவ் அமைதியாக இருந்ததால்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது என டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் எச்சரித்துள்ளார்.
சென்னை: நரசிம்மராவ் அமைதியாக இருந்ததால்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது என டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் எச்சரித்துள்ளார். எத்தனை நாட்கள் தான் முதல்வர் அமைதியாக இருப்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார் எம்எல்ஏ வெற்றிவேல். எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மீடியா முன் போட்டுடைத்தவரும் அவரே.
இந்நிலையில் வெற்றிவேல் எம்எல்ஏ சென்னை அடையாறில் டிடிவி தினகரனை அவரது வீட்டில் சென்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது
அப்போது, எத்தனை நாட்கள் தான் எடப்பாடி பழனிசாமி, நரசிம்மராவ் போல் மவுனம் காப்பார்? என்று கேள்வி எழுப்பினார். நரசிம்ம ராவ் மவுனம் காத்ததால் தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது என்றும் அவர் எச்சரித்தார்.
எம்பி அரி உத்தமசீலன் அல்ல
அதனால் அரி எம்பி போன்று தான் தோன்றித்தனமாக பேசுபவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டித்து வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அரி உத்தமசீலன் போன்று பேசக் கூடாது என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ கண்டித்தார்.
கிள்ளி எறிய தெரியும்
அரி போன்று தவறு செய்பவர்களை எப்படி கிள்ளி எறிய வேண்டும் என எங்களுக்கு தெரியும் என்றும் வெற்றிவேல் கூறினார். நடவடிக்கை தாமதம் ஆகலாம், ஆனால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெற்றிவேல் எச்சரித்தார்.
என்னால் மறைக்க முடியாது
நன்றி மறந்து விட்டு யாரும் பேசக் கூடாது என்றும் வெற்றிவேல் கூறினார். ஒரு அளவுக்கு மேல் என்னால் பொறுமை காத்து அனைத்தையும் மறைக்க முடியாது என்றும் வெற்றி வேல் கூறினார்.