குற்றாலத்தில் மனதிற்கு ரம்மியம் தரும் சுற்றுச்சூழல் பூங்கா
குற்றாலம்: அருவி நகரமான குற்றாலத்தில் ஐந்தருவியின் அருகே அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சுற்றுலா பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல் உள்ளது.
பொதுவாக, குற்றாலத்தில் மே மாதம் இறுதியில் சீசன் துவங்கி ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். அருவிகளில் தண்ணீர் இல்லாவிட்டாலும் ஆண்டு முழுவதும் குற்றாலத்தை ரசிக்க உருவாக்கப்பட்டது தான் சுற்றுச்சூழல் பூங்கா.
ஐந்தருவியில் குளிக்க ஆர்வமாகச் செல்லும் பயணிகள் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இந்த சுற்றுச்சூழல் பூங்காவைப் பார்க்க ஆர்வம் செலுத்துவதில்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கமாகும்.

சுற்றுச்சூழல் பூங்கா
குற்றாலத்தில் அரசு தோட்டக்கலை பண்ணை 1959-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தப் பண்ணை தற்போது தோட்டக்கலைத் துறையினரால் தரம் உயர்த்தப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா சென்னையில் விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

எழில் கொஞ்சும் பூங்கா
நீரூற்றுகள், சிற்பங்கள், புல் தரைகள், மலைப்பகுதி, 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் வகையில் நடை பாதை, சிறுவர் பூங்கா, நறுமண தோட்டம், மலர் வனம், சாகச விளையாட்டுத் திடல், பசுமை குடில் போன்ற 22 வகையான சிறப்பம்சங்களை உள்ளடக்கியது எக்கோ பார்க்.

சுற்றுலா பயணிகளுக்காக
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் நில வடிவமைப்பைப் பாதுகாப்பது குறித்து சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதே பூங்காவின் நோக்கமாகும்.

ரம்மியமான சூழலில்
இந்தப் பூங்காவுக்கு அழகூட்டும் வண்ணம் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகளும், தானியங்கி முறையில் செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

37 ஏக்கர் பரப்பளவு
37 ஏக்கர் பரப்பளவில் இயற்கை மணம் வீசும் செடி, கொடிகளுடன் தோட்டக் கலைத்துறை இதை பராமரித்து வருகிறது.

அழகான பாதைகள்
நெடிய மலைக்குன்றுகளும், சுற்றிச் சுற்றி செல்லும் பாதைகளும் பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன. நீரூற்றுகள், சிற்பங்கள், புல் தரைகள், நடை பாதை, என குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையும் குடும்பத்துடன் குதூகலப்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு விளையாட்டு
குழந்தைகள் விளையாட அழகான இடங்கள் உள்ளன. சிறுவர் பூங்கா, நறுமண தோட்டம், மலர் வனம், சாகச விளையாட்டுத் திடல் என மனதிற்கு இதமளிக்கிறது.

காட்டாற்றின் சலசலப்பு
லேசாய் பெய்யும் சாரல் மழையில் நனைந்து கொண்டே நடந்து போனால் காட்டாறின் சலசலப்பு, அதைக் காண மரப்பாலம் என அசத்தலாய் உள்ளது. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே சில இடங்களில் உடைந்தும் போயுள்ளது.

விஐபி அருவி
மலைப்பாதையின் வழியாக, சிறிது தூரம் சென்றால், பழத்தோட்ட அருவி நம் மனதைக் கவர்கிறது. எம்.எல்.ஏ.,கள், எம்.பி.,களிடம் பாஸ் பெற்றவர்கள் மற்றும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்ற முக்கியஸ்தர்கள் மட்டுமே குளிக்ககூடிய அருவியாக இருந்ததால், இதற்கு, வி.ஐ.பி., அருவி என்றும் பெயர். பாஸ் கொடுப்பதில் குளறுபடி, ஊழல் எல்லாம் நடந்தாக இதை அடுத்து, பழத்தோட்ட அருவியை, முள்வேலி போட்டு மூடிவிட்டனர்.

கண்கவரும் பூங்கா
இந்த அருவியை சுற்றிலும் இருந்த இடத்தை, பசுமை மயமாக்கிய தோட்டக் கலைத்துறை, இங்கு, பல கோடி ரூபாய் செலவில், எக்கோ பார்க்(சுற்றுச்சூழல் பூங்கா)ஏற்படுத்தி விட்டனர். ஆண்டு முழுவதும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், இந்த பூங்கா அமையப் பெற்றுள்ளது.

பார்வையாளர்கள் பரவசம்
நெடிய மலைக்குன்றுகளும், சுற்றிச் சுற்றி செல்லும் பாதைகளும், பசுமை குடில் போன்ற, பல வகையான சிறப்பம்சங்களை, இந்த எக்கோ பார்க் கொண்டுள்ளது. இது பார்வையாளர்களை பரவசப்படுத்தும்.

மலைவாழ் உயிரினங்கள்
36 ஏக்கர் பரப்பளவில், இயற்கை மணம் வீசும் செடி, கொடிகளுடன், ஆங்காங்கே எட்டிப் பார்க்கும், மலபார் அணில் போன்ற மலை வாழ் உயிரினங்களுடன், பூங்கா, ரம்மியமாக உள்ளது.

கட்டணம் எவ்வளவு
குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையும் குடும்பத்துடன் குதூகலிக்க செய்யும் இந்த பூங்காவிற்கு, நுழைவுக் கட்டணம் உண்டு. பூங்காவைச் சுற்றிப் பார்க்க பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10, புகைப்படம் எடுக்க கேமராவுக்கு ரூ.30, விடியோ கேமராக்களுக்கு ரூ.75 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புக்கு அனுமதி
மேலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.50 வாகன நிறுத்துமிடக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அருவி மீண்டும் திறக்கப்படுமா?
பழத்தோட்ட அருவியில் இப்போது, யாருமே அங்கு குளிக்க முடியாது என்பதால் சுற்றுலா பயணிகளிடையே பூங்காவைப் பார்க்க ஆர்வம் இல்லை. எனவே அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி அளித்தால் இந்த சுற்றுச்சூழல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?.












Click it and Unblock the Notifications