சட்டென்று மாறிய வானிலை.. ஜோவென்று ஆர்ப்பரிக்கும் குற்றாலம் - வெளுத்து வாங்கும் பருவமழை
நெல்லை: குற்றாலத்தில் மூன்று வாரங்களுக்கு பிறகு சீசன் தொடங்கி விட்டது. ஒரே நாளில் மாறிய சீசனால் தென்மேற்கு பருவ மழை வெளுத்து வருகிறது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் காலத்தில் நல்ல மழை பெய்யும்.
இந்த கால கட்டத்தில் குற்றாலத்தில் மனதை மயங்கும் ரம்ய சூழல் நிலவும்.
அடிக்குது குளிரு:
குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது லேசான சாரல் பெய்யும். இதை அனுபவிக்கவே ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து படையெடுப்பர்.
5 லட்சம் சுற்றுலாப் பயணிகள்:
இந்த சீசனில் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த ஆண்டு சீசன் குறித்த காலத்தில் துவங்காதால் வியாாரிகள் கலக்கத்தில் இருந்தனர்.
கொட்டித் தீர்க்கும் மழை:
இந்த நிலையில் ஓரே நாளில் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. நேற்று காலை தொடங்கிய மழை இடை விடாது இன்று காலை 7 மணி வரை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது.
புலியருவில் தண்ணீர்:
அதே நேரத்தில் காற்றும் அசுரத்தனமாக வீசுகிறது. மதியத்திற்கு பிறகு மெயின் அருவியில் தண்ணீர் விழ தொடங்கியது. பின்னர் ஐந்தருவியிலும், பிற அருவிகளிலும் ,தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. பழைய குற்றாலம், புலியருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது. இன்று காலை அது அதிகரித்திருக்கும் என தெரிகிறது.
திடீர் வெள்ளப்பெருக்கு:
இந்த நிலையில் செண்பகாதேவி மெயின் அருவியில் திடீர் என வெளளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவியிலும் வெளளப்பெருக்கு ஏற்படலாம் என கருதிய போலீசார் மாலை திடீரென சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.
சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி:
சிறிது நேரம் காத்திருப்புக்கு பிறகு வெள்ளம் எதுவும் ஏற்படாததால் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சீசன் துவங்கியதுதான் தாமதம் அடுத்த சில நேரங்களில் சுற்றுலா பயணிகள் அங்கு குவிய தொடங்கி விட்டனர். இந்த மழை தொடர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.