ஏண்டா கஞ்சா விற்கலை.. காரமடை அருகே வாலிபரை விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்
பழனி அருகே கஞ்சா விற்க மறுத்த இளைஞரை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி தப்பி சென்றது.
பழனி: பழனி அருகே காரமடையில் கஞ்சா விற்க மறுத்ததால் இளைஞர் ஒருவருக்கு சரமாரி வெட்டு விழுந்துள்ளது.
பழனி அருகே காரமடையை சேர்ந்தவர் சுரேஷ், 29. இவர் கொமரலிங்கத்தில் உள்ள தனியார் கறிக்கடையில் கறிவெட்டும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கஞ்சா குடிக்கும் பழக்கம் பேருந்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியில் கஞ்சா வாங்க செல்லும்போது கஞ்சா விற்கும் கும்பலான மூக்கையா, பாஸ்கரன், ரஞ்சிதம் போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பல் நாளடைவில் சுரேஷை காரமடையில் கஞ்சா விற்று தருமாறு வற்புறுத்தியது.
ஆனால் அதற்கு சுரேஷ் மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த கும்பல் சுரேஷை பலமாக தாக்கியது. இதனால் இரு தரப்பினருமிடையே தகராறு நீடித்து வருகிறது.
இந்நிலையில், சுரேஷ், கறிவெட்டும் தொழிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை காரமடை பேருந்தில் வந்திறங்கினார். அப்போது ஏற்கனவே அங்கு மறைந்திருந்த கஞ்சா கும்பலை சேர்ந்த மூக்கையா, பாஸ்கரன், ரஞ்சிதம் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் உட்பட நான்கு பேர் சுரேசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.
இதனால் சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடித்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், உயிருக்கு போராகொண்டிருந்த சுரேஷை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதுடன், இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.