அந்தமான் அருகே உருவான "‘ஹூட் ஹூட்’ புயல் 12–ந்தேதி விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்கிறது!
சென்னை: அந்தமான்அருகே உருவான ‘ஹூட் ஹூட்' புயல் வரும் 12-ந்தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கும் ஒடிஷாவின் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விலகி வடகிழக்கு பருவமழை வருகிற 20-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்துவருகிறது.

ஹூட் ஹூட் புயல்
இதனிடையே அந்தமான் அருகே புதிதாக புயல் உருவாகி உள்ளது. அந்த புயலுக்கு ஹூட் ஹூட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயல் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், அந்தமான் அருகே உருவான புயல்சின்னம் வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. அந்த புயலுக்கு ஹூட் ஹூட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் அந்தமானையொட்டி உள்ள லாங் தீவு அருகே நிலை கொண்டுள்ளது. அது மேலும் வலுவடைந்து இன்று தீவிரம் அடைந்து வலுவான புயலாக மாறுகிறது.
ஒடிஷா, ஆந்திராவில் கரை கடக்கும்
அது அப்படியே நகர்ந்து விசாகப்பட்டினத்துக்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே 12-ந்தேதி பிற்பகல் கரையை கடக்கும். அப்போது ஒடிசாவில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
தமிழகம், புதுச்சேரியில் மழை
இந்த நிலையில் தெற்கு ஆந்திரமாநிலத்தையொட்டிய கடலோரப்பகுதியில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பல இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சிலஇடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றார்.
புயல் எச்சரிக்கை கூண்டு
புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி முதலிய இடங்களில் உள்ள துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அன்று பாய்லின்
கடந்த ஆண்டு இதே அக்டோபரில் ஒடிஷாவை பாய்லின் புயல் தாக்கி நிலைய வைத்தது. இதனால் நடப்பாண்டு ஒடிஷா, ஆந்திரா அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications