அரபிக் கடலில் உருவானது 'மேக்' புயல்; தமிழகத்துக்கு பாதிப்பு இல்லையாம்!- ரமணன்
சென்னை: அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளது. மேக் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் கொட்டி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் தொடர்வதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசம், மேல் அணைக்கட்டு, பெருந்துறை ஆகிய பகுதிகளில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் புயல்
இதற்கிடையில், கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘மேக்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தொடர்ந்து மேற்கு, தென்மேற்காக நகர்ந்து ஏமன் வளைகுடா பகுதியை நோக்கி சென்று, நவம்பர் 8ம் தேதி வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ஆபத்தில்லை
இந்த புயலால் தமிழகத்துக்கு ஆபத்தில்லை. அதே நேரம், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நாளை(சனிக்கிழமை) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இடியுடன் மழை
இதன் காரணமாக கடலோர பகுதிகளில் ஆங்காங்கே கன மழையும், இதர பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications