வர்தா புயலால் ரூ.6,749 கோடி இழப்பு- கட்டங்கள், விவசாயம் சேதம், கால்நடைகள் இறப்பு
வர்தா புயலால் தமிழகத்தில் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் கணித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் உருவான வர்தா புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை, கடுமையாக தாக்கியது. மணிக்கு, 192 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளியால், சென்னை சின்னாபின்னமானது.
சாலைகளிலும், தெருக்களிலும் நிறைந்திருந்த, ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. புயல் தாக்கியும், மரங்கள் விழுந்தும், 10 ஆயிரம் மின் கம்பங்கள், 400 டிரான்ஸ்பார்மர்கள் செயலிழந்ததால், திங்கட்கிழமை காலை முதல் மின் வினியோகம் தடைபட்டது. 3வது நாளாக மின் விநியோகம் சீராகவில்லை. இன்னும் 3 நாட்கள் ஆகும் என்று எச்சரித்துள்ளது மின்சாரத்துறை.
வார்தா புயல் சென்னையை தாக்கி கரையை கடந்து சென்றது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ். ராவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாதிப்பு எவ்வளவு?
வர்தா புயலால் தமிழகத்தில் 6 ஆயிரத்து 749 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் பல ஆயிரம் மரங்கள் விழுந்தன. விவசாய நிலங்களுக்கும் இந்த புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டடங்கள் சேதம்
நகர்பகுதிகளில் கார்கள், இருசக்கர வாகனங்கள், தெருக்களில் தான் நிறுத்தப்படுகின்றன; அவை, மரங்கள் விழுந்து, உடைந்து சிதறின. மேலும், நுாற்றுக்கணக்கான வீடு, கடைகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டுள்ளன. மரங்கள் விழுந்து கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

பலத்த சேதம்
வாழைத் தோட்டங்கள், பப்பாளிப்பழ தோட்டம், வயல்கள் போன்றவை புயல் மற்றும் பலத்த மழையால் அழிந்துவிட்டன. பல இடங்களில் கால்நடைகள் இறந்துவிட்டன. நகர்ப்புறங்களில் கார்கள், கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

கடைகள் அடைப்பு
வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் புறநகர் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில்கள் பாதிக்கப்பட்டன. கடைகள் மூன்றாவது நாளாக மூடப்பட்டுள்ளன.

போக்குவரத்து பாதிப்பு
புயலால், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு, உணவு, உடை, நீர் சுத்திகரிப்பு உபகரணம் உள்ளிட்டவற்றை, தொழில் நிறுவனங்கள் தந்து உதவ வேண்டும். ரயில், விமானம், பஸ் போக்குவரத்து ஆகியவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, சுற்றுலா ஆகியவை பாதிக்கப்பட்டன.

ரூ. 6749 கோடி பாதிப்பு
ஒட்டு மொத்தமாக கணிக்கும்போது, வார்தா புயலால் ரூ.6 ஆயிரத்து 749 கோடி அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், முழு சேதத்தை மதிப்பிட, சில மாதங்களாகும். இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு அசோசெம் உறுப்பினர்கள் தேவையான உதவிகளை செய்யவேண்டும். உணவு, உடை, படுக்கைகள், போர்வை உள்பட அத்தியாவசிய தேவைகளை அசோசெம் அமைப்பின் உறுப்பினர்கள் வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications