வர்தா புயல் எதிரொலி.. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயல் பாதிப்பை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் கரையைக் கடந்த போது வீசிய பலத்த காற்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பலத்த சூறைக் காற்றால் ஏராளமான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்தன. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் மின் வினியோகம் இன்னும் சீராகவில்லை. சென்னையில் கோயம்பேடு, மயிலாப்பூர், மடிப்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் மின் விநியோகம் ஓரளவுக்கு சீராகியுள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் மொபைல் டவர்கள், ஏடிஎம் இயந்திரங்கள் செயல் இழந்துள்ளன. இதன்காரணமாக, தொலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் சீற்றம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இதனால் அந்த மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். அதே போல் மூன்று மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்கல்விதுறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications