கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
விசாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கில் 570 கி.மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் நிலைக்கொண்டுள்ளதால் கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர்: வங்கக்கடலில் காற்றுழத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதை அடுத்து கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அந்தமான் அருகே நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது இப்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விசாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கில் 570 கி.மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் நிலைக்கொண்டு உள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில நேரங்களில் மழை பெய்யும். தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகையில் 14 செ.மீட்டர் மழையும் காரைக்காலில் 11 செ.மீட்டர் மழையும் பதிவாகிஉள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கைக் கூண்டு எண்களுக்கான விளக்கத்தை அறிந்து கொள்வோம்.
- ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.
- இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
- மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
- நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.
- ஐந்தாவது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
- ஆறாவது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
- ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.
- எட்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
- ஒன்பதாம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
- பத்தாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
- பதினொன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து இன்று கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications