என்ன கொடூரம்.. மனிதர்கள்தானா இவர்கள்...?
சென்னை: பார்க்கவே பதை பதைக்கிறது இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால். சுற்றிலும் எத்தனை ஜனங்கள்.. ஆனால் அருகே வர ஒருவருக்கும் துணிச்சல் இல்லை. ஒருவரைப் போட்டு கொடூரமாகக் கொன்று குவித்துள்ளனர் இந்த கொலைபாதகர்கள். மனிதத்தன்மையே இல்லாமல் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இவர்கள் கொடுத்துள்ள இந்தத் தண்டனை மனிதநேயற்றமது மட்டுமல்ல, மிருகத்தனமானதும் கூட.
தவறு செய்தவன் ரவுடி என்றால்.. அந்த ரவுடியை இப்படிக் கொடூரமாக வைத்துக் கொன்ற இவர்கள் யார்.. புத்தரா.. காந்தியா.. இவர்கள் அதை விடக் கேடு கெட்டவர்களாக இருப்பார்கள் போல.
வேலூரில் நடந்த பயங்கரக் கொலை இது. கொல்லப்பட்டவர் மகா என்கிற மகாலிங்கம். ரவுடியாக வலம் வந்தவர். பல வழக்குகள். அதில் முக்கியமானது, ஜி.ஜி. ரவி என்ற அதிமுக பிரமுகரின் தம்பியைக் கொன்ற வழக்கு. அது முதலே இருவருக்கும் இடையே புகைச்சல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு ரவியைக் கொல்ல தனது கூட்டாளிகள் இருவருடன் முயற்சித்துள்ளார் மகாலிங்கம். இதில் ரவிக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டு உயிர் தப்பியுள்ளார். இதையடுத்து மகாலிங்கத்தை, ரவியின் ஆட்கள் ஓட ஓட விரட்டியுள்ளனர். வேலூரில் மக்கள் பலர் கூடி வேடிக்கை பார்க்க காட்பாடி செல்லும் ரோட்டில் வைத்து மகாலிங்கத்தை மடக்கிய அந்தக் கும்பல் நடு ரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளது.
இதில் நிலை குலைந்த மகாலிங்கம் சாலையில் விழுந்துள்ளார். அதன் பிறகுதான் வெறியாட்டம் கூடியுள்ளது அந்தக் கும்பலிடம். பெரிய பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் சரமாரியாகப் போட்டு மிருகத்தனமாக கொன்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே மகாலிங்கம் உயிரிழந்துள்ளார்.
அதில் இரு இளைஞர்கள் (இருவரும் ரவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலத் தெரிகிறது.. அவர்களிடம் அப்படி ஒரு வெறி தெரிகிறது) மிகக் கொடூரமாக கல்லைப் போட்டு மகாலிங்கத்தைத் துடிக்கத் துடிக்கக் கொல்வது புகைப்படமாக வெளியே வந்துள்ளது.
என்ன கொடுமை இது... தவறு செய்தவன் என்றால் பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பதுதானே பொறுப்பான செயல். அதுவும் அதிமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், இப்படி அதிமுகவினரே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நாலாந்தர கொலைகார கூலிப்படை போல செயல்பட்டு நடுரோட்டில் வைத்து சிக்கிய நபரை சின்னாபின்னாப்படுத்திய செயல் வேலூர் மக்களை அதிர வைத்துள்ளது.
அதிமுகவினர் என்றால் இவ்வளவு கொடூரமானவர்களா என்று எண்ணும் அளவுக்கு மிகக் கொடூரமான கொலையாளிகளாக நடந்து கொண்டுள்ளது இந்தக் கும்பல்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த சிலரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அத்தனை பேருமே ரவி மற்றும் அவரது தம்பியின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது போலீஸார் மிகக் கடுமையான பிரிவில் வழக்குப் பதிவு செய்து கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று அப்பாவிப் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.