செரிலாக் பால் பவுடரிலும் பூச்சி... கோவையில் பரபரப்பு!
கோவை: நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடூல்ஸைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் செரிலாக் பால் பவுடரிலும் பூச்சிகள் இருப்பதாக கோவையில் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து அந்த செரிலாக் பால் பவுடரை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடூல்ஸில் அளவுக்கு அதிகமாக காரீயம் இருப்பது உ.பியில் கண்டறியப்பட்டது. இதையடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மேகிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் அதே நெஸ்லே நிறுவனத்தின் செரிலாக் பால் பவுடரில் பூச்சிகள் இருப்பது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் பேரூரில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் செரிலாக் பால் பவுடர் வாங்கினார். வீட்டுக்கு வந்து பார்த்த அவர் செரிலாக்கில் இறந்த பூச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த பால் பவுடரை எடுத்துக் கொண்டு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி கதிரவனைச் சந்தித்து புகார் அளித்தார். இதையடுத்து அந்த பால் பவுடர் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆய்வக முடிவில் செரிலாக்கில் தவறு இருப்பது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.