நாகையிலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் புயல் சின்னம்- இன்று இரவு முதல் கன மழை
நாகப்பட்டனம்: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் நாகப்பட்டனத்திலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது நாகை அருகே நாளை மாலை கரையைக் கடக்கும் என்று எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
புயல் சின்னம் தமிழக கரையை நோக்கி நெருங்கி வருவதால் நாகை மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் அதிகாரிகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடலோரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது நாகையிலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் நிற்கிறது. இந்த காற்றழுத்தம் தொடர்ந்து வட மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த புயல் சின்னமானது கரையை நெருங்கும்போது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை இந்த புயல் சின்னமானது நாகை அருகே கரையைக் கடக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று இரவு முதல் 17ம் தேதிவரை 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில், குறிப்பாக வடக்கு தமிழக கரையோரங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்கள் போகவில்லை
புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால் கோடியக்கரை மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
நாகை மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. நாகூர், சில்லடி, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர் ஆகிய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களது 500 விசை படகுகளும், 4 ஆயிரம் பைபர் படகுகளும் கரையில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளது.
1ம் எண் புயல் கூண்டு
நாகை துறை முகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் நாகை பகுதியில் இன்று காலை வரை மழைக்கான அறிகுறி தென்படவில்லை. காலையில் வெயில் அடிக்க தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவா சத்தி ரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன் வயல், செந்தலை வயல், செம்பியான் மாதேவிப்பட்டினம் உள்படி 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 1,500 பாய்மர படகு, பைபர் படகு, கட்டு மரங்கள் உள்ளன.
இதுவரை மழையைக் காணோம்
சென்னையைப் பொறுத்தவரை கடந்த 3 நாட்களாக வானம் மேகமூட்டமாக இருக்கிறது. நன்கு குளிர் வீசுகிறது. வீட்டில் மின்விசிறியைப் போட முடியவில்லை. வாடைக்காற்றாக இருக்கிறது. வெறும் காற்றுதான் வீசிக் கொண்டிருக்கிறது. மழையை இதுவரை காணவில்லை. மழைக்காக மக்கள் காத்துக் கொ்ண்டிருக்கிறார்கள்.
அவசர ஆலோசனை
புயல் சின்னம் நெருங்கி வருவதைத் தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் டி. முனுசாமி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவர் அதிகாரிகளுடன் விவாதித்தார்.
மாவட்டத்தில் உள்ள புயல் காப்பு மையங்களை தயார் நிலையில் வைக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை முடுக்கி விடவும அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரசுப் பள்ளிகள்,கல்லூரிகள், திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைக்குமாறும், தேவைப்படும் நேரத்தில் மக்களை அங்கு தங்க வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் அவசர காலத்திற்கு கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையின் உதவியைப் பெறுமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications