ஆர்.கே நகரில் நிற்கப் போகிறேன்.. தீபா அதிரடி அறிவிப்பு!
ஜெயலலிதா மறைந்ததினால் ஆர்.கே. நகரில் இடைத் தேர்தல் வர உள்ளது. இந்தத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று அவரது பேரவையின் கொடியை அறிமுகம் செய்து வைத்து தீபா அறிவித்தார்.
சென்னை: ஆர்.கே நகரில் வர உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மறைந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தீவிர அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். அதுகுறித்த முறையான அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அறிவிக்கப்படும் என்று தீபா ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் தொடங்கிய பேரவையின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். அவரது அமைப்பிற்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று பெயரிட்டுள்ளார்.
இந்தப் பேரவையின் பொருளாளராக தான் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்த தீபாவிடம், ஆர்.கே. நகரில் வர உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று டக்கென்று பதில் சொன்னார் தீபா. மேலும், வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தீபா அறிவித்துள்ளார்.