முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பியதாக பிரான்ஸ் தமிழச்சி மீது வழக்குப் பதிவு!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து முகநூலில் அவதூறு செய்தி பரப்பியதாக பிரான்ஸ் தமிழச்சி மீது சென்னை பெருநகர காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி இரவு உடல்நலக்குறைவினால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில் முதல்வர் உடல்நலம் குறித்து பிரான்ஸ் தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பான ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தத.
இதனிடையே பேஸ்புக்கில் முதல்வர் உடல்நலம் குறித்து தவறான தகவல் பரப்புவதாக பிரான்ஸ் தமிழச்சி மீது அதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பிரான்ஸ் தமிழச்சி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.