ராமதாஸ் நற்பெயருக்கு களங்கம்..பாரிவேந்தருக்கு எதிராக பாமக அவதூறு வழக்கு
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பெருநகர 15-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், பாமகவின் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சத்திய நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வன்னியர் சங்கத்திலும், பாமக.விலும் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன்.

தமிழ் நாளிதழ்களில், கடந்த 11-ஆம் தேதி பச்சமுத்து சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், கடந்த சட்டசபைத் தேர்தலின் போது இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இணையாக செய்தித்தாள்களில் கோடி கோடியாக பணம் செலவழித்து பாமக விளம்பரம் செய்ததே, அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க முடியுமா பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கட்சிக்காரர்கள் மூலம் பணம் கேட்டு தன்னிடம் கை நீட்டியதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான அவதூறான கருத்துகளாகும். இந்தக் கருத்தால் பாமகவின் ஒவ்வொரு தொண்டனுக்கும், பொது மக்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துயுள்ளது. மேலும் இது பாமகவின் நிறுவனர் ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது.
எனவே, பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அறிக்கை வெளியிட்ட பச்சமுத்து மீது, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக உரிய இழப்பீட்டினை பச்சமுத்துவிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
நீதிபதி ஈஸ்வர மூர்த்தி முன்பு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை வரும் 24-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications