இரட்டை இலை மீட்புக்கு லஞ்சம் - டிடிவி தினகரன், மல்லியுடன் டெல்லி புறப்பட்டது போலீஸ்
இரட்டை இலைக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லி ஆகியோருடன் சென்னையில் 3 நாள்கள் முகாமிட்ட டெல்லி போலீஸார் டெல்லி புறப்பட்டனர்.
சென்னை: இரட்டை இலைக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனன் ஆகியோருடன் சென்னையில் 3 நாள்கள் முகாமிட்ட டெல்லி உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான குழு தற்போது டெல்லி புறப்பட்டனர்.
முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் தரகர் சுகேஷ் சந்திரா முதலில் கைது செய்யப்பட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனன் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
5 நாட்கள் போலீஸ் கஸ்டடி
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரன், மல்லியை 5 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இந்நிலையில் சுகேஷுக்கு ரூ.10 கோடி ஹவாலா ஏஜென்ட் மூலம் பணம் கைமாறியது தெரியவந்தது.
சென்னையில் விசாரணை
ஹவாலா பணம் கைமாறியது குறித்தும், இரட்டை இலை பேரத்தில் ரூ.50 கோடி பணத்தை தர முன்வைத்த தொழிலதிபர்கள் குறித்தும் விசாரணை நடத்த தினகரன், மல்லியை போலீஸார் வியாழக்கிழமை சென்னைக்கு அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பெசன்ட் நகரில் உள்ள தினகரன் வீட்டுக்கு அழைத்து சென்ற போலீஸார் அவரது மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்தினர்.
சென்னையில் பல இடங்களில்
மேலும் சென்னையில் ஆதம்பாக்கம், கொளப்பாக்கம், பெரம்பூர், திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர். டிடிவி தினகரனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகன், தனியார் செல்போன் நிறுவன மேலாளர் டேனியல், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கோபி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர். மேலும் தினகரனின் வழக்கறிஞர் மோகன் ராஜ் வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லி புறப்பட்டனர்
இதனிடையே டெல்லி விமான நிலையத்தில் வைத்து இரு ஹவாலா ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விசாரணையை முடித்துக் கொண்டு தினகரனையும், மல்லிகார்ஜுனனையும் டெல்லி உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான போலீஸார் அழைத்துக் கொண்டு டெல்லி புறப்பட்டனர்.