பல் வலிச்சா சூடம் வைக்கக் கூடாது... மாணவர்களே டாக்டர் சொல்வதைக் கேளுங்க!
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான பல் சிகிச்சை முகாமின்போது அதில் கலந்து கொண்ட அரசு மருத்துவர் டாக்டர் சண்முகப்பிரியா, பல் சுகாதாரம் குறித்து மாணவர்களுக்கு பல அரிய டிப்ஸ்களைக் கொடுத்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான பல் சிகிச்சை முகாம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.

முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவர் ரிஷி செல்வா வரவேற்றார். திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் சண்முகப்பிரியா மாணவர்களிடையே பல் தொடர்பான நோய்களான பூச்சிப் பல், பற் சிதைவு நோய், பல் சொத்தை, பல் ஈறுகள் பிரச்சனை, வாய் துர்நாற்றம், தெத்துப் பல், எக்ஸ்ட்ரா பல் முளைத்தல், பல் எத்தி வருதல் போன்ற மாணவர்களின் பொதுவான பல் நோய்கள் தொடர்பாகவும், பல் வலி வந்தால் பல்லில் சூடம் வைக்க கூடாது எனவும் விளக்கி கூறினார்.

மாணவ, மாணவியரின் பல் தொடர்பான நோய்களுக்கு பள்ளியிலேயே சிகிச்சை அளித்தார். பல் சிகிச்சையின்போது அவரது உதவியாளர் சுமதி உடன் இருந்தார். மாணவிகள் தனம், காயத்ரி, தனலெட்சுமி, ராஜேஸ்வரி, சொர்ணம்பிகா, மாணவர்கள் சூரியா, நவீன்குமார், தமிழரசன் ஆகியோரின் பல் தொடர்பான பல கேள்விகளுக்கு மருத்துவர் பதில் அளித்தார்.
முகாமில் ஏராளமான பெற்றோரும் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications