மதுரை தோப்பூரில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் ஓபிஎஸ் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உடைப்பு!
மதுரை தோப்பூரில் அமைக்கப்பட்ட அதிமுக கொடிக்கம்பத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை: தோப்பூரில் அமைக்கப்பட்ட அதிமுக கொடிக்கம்பத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அடுத்து திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் கடந்த நவம்பர் மாதம் அதிமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதாவது ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மற்றும் இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்ட வெற்றியை கொண்டாடுவதற்காக இந்த விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது. இதனால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது.
கொடி கம்பத்தில் கல்வெட்டு
முப்பெரும் விழாவை முன்னிட்டு தோப்பூரில் 100 அடி உயர அதிமுக கொடிகம்பம் நிறுவப்பட்டது. இந்த கொடி கம்பத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டது.
கல்வெட்டில் பெயர்
இந்த கல்வெட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரும், அதேபோன்று புறநகர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரும் இடம்பெற்றது.
கல்வெட்டில் பெயர் இல்லை
ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் கல்வெட்டில் பதிக்கப்படாமல் இருந்தது. இதற்கு ஓபிஎஸின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவிக்கவே கொடிக்கம்பத்தின் பக்கவாட்டின் ஓபிஎஸ் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு பின்னர் பதிக்கப்பட்டது.
ஓபிஎஸ் உடைப்பு
இந்நிலையில் ஓபிஎஸ் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மட்டும் தற்போது உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கல்வெட்டை உடைத்தது யார் என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.