ஈழப் படுகொலையையே தமிழக மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே... சொல்கிறார் ஞானதேசிகன்
சென்னை: 2009ம் ஆண்டு ஈழப் போர் முடிந்த சில நாட்களிலேயே லோக்சபா தேர்தல் வந்தபோது அதிலேயே அந்தப் பிரச்சினை எதிரொலிக்கவில்லை. தமிழக மக்கள் அதைப் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே தற்போதைய காமன்வெல்த் பி்ரச்சினையும் 2014ம் ஆண்டு வரப் போகும் லோக்சபா தேர்தலி்ல் எதிரொலிக்காது என்று பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.
காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழகத்தில் நிலவி வரும் மனப்பாங்கு குறித்தும், கட்சிகளின் எதிர்ப்புக் குரல் குறித்தும் அவர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஞானதேசிகனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் வருமாறு...

இது ஒரு பிரச்சினையே இல்லை
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது என்பது நிச்சயம் தேர்தல் பிரச்சினை அல்ல. 2014 தேர்தலிலும் இது எதிரொலிக்காது.

தமிழர் படுகொலையையே மறந்தவர்கள் தமிழ்நாட்டவர்கள்
2009ம் ஆண்டு ஈழப் போர் முடிந்த சில நாட்களிலேயே லோக்சபாவுக்குத் தேர்தல் வந்தது. அதில் அந்தப் பிரச்சினை எதிரொலிக்கவில்லை. தமிழக மக்கள் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.இப்போதும் அப்படித்தான் நடக்கும்.

தனிமைப்படுத்தப்பட்டால்...
சல்மான் குர்ஷித் இலங்கைக்குப் போயிருப்பதால் தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்படும் என்று நான் கருதவில்லை. ஒரு வேளை அப்படி நடந்தாலும் கூட அது தற்காலிகமானதாகவே இருக்கும்.

தமிழக தீர்மானத்தை மதித்தார் பிரதமர்
உண்மையில் தமிழக சட்டசபைத் தீர்மானத்தை பிரதமர் மதிக்கவே செய்துள்ளார். இதனால்தான் அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. சல்மான் குர்ஷித்தை மட்டும் அனுப்பியதற்குக் காரணம், இலங்கையுடன் இணைந்து தமிழர் பகுதிகளில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே அவர் அனுப்பப்பட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினையையும் தீர்ப்போம்
அதேபோல தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும், மாநாடு முடிவடைந்த பின்னர், இந்தியா தற்போது இலங்கையில் மேற்கொண்டு வரும் பணிகள் முடிவடைந்த பின்னர் சுமூகமாக தீர்க்கப்படும்.

கூட்டணி குறித்து பிறகு யோசிப்போம்
தமிழகத்தில் கூட்டணி குறித்து இப்போது யோசிக்க வேண்டியதில்லை. இன்னும் அவகாசம் இருக்கிறது என்றார் ஞானதேசிகன்.












Click it and Unblock the Notifications