தேவர் ஜெயந்தியையொட்டி இன்று திமுக, தேமுதிக சார்பில் மரியாதை!
தேவர் ஜெயந்தியையொட்டி இன்று திமுக, தேமுதிக சார்பில் மரியாதை!
சென்னை: தேவர் ஜெயந்தியையொட்டி இன்று சென்னை நந்தனம் சிக்னல் அருகில் உள்ள தேவர் சிலைக்கு திமுக சார்பில் மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. அதேபோன்று தேமுதி தலைவர் விஜயகாந்த் அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 54வது குருபூஜையும், 109வது ஜெயந்தி விழாவும் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை தொடங்கிய தேவரின் குருபூஜை விழா, ஆன்மிக விழா, முளைப்பாரி, பால்குடம், அபிஷேகம், லட்சார்ச்சனை என பூஜை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று, தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர். அதே போன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜகவின் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் என பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் நந்தனம் சிக்னல் அருகில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன், எம்.பி. ஆர்எஸ் பாரதி, எம்.பி. டிஆர் பாலு ஆகியோர் நந்தனத்திற்கு சென்று தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள்.
அதே போன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது கட்சி அலுவலகத்தில் உள்ள முத்துராமலிங்கம் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.