டிடிவி தினகரனிடம் இருந்து பணம் வாங்கல.. நம்புங்க ப்ளிஸ்.. கெஞ்சும் தீபா கணவர் மாதவன்
டெல்லி திகார் சிறையில் உள்ள டிடிவி தினகரனிடம் இருந்து தான் பணம் எதுவும் வாங்கவில்லை என்று தீபாவின் கணவரும் எம்.ஜெ.தி.மு.க.வின் நிறுவனருமான மாதவன் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா குடும்பத்துடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று எம்.ஜெ.தி.மு.க.வின் நிறுவனர் மாதவன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவரான மாதவன், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தீபா பேரவையில் இருந்து விலகினார்.
மேலும், தனக்கு ஒரு கோடிக்கும் மேல் தொண்டர்கள் ஆதரவு இருப்பதாகக் கூறிக் கொண்டு மாதவன், எம்.ஜெ.தி.மு.க. என்ற தனிக் கட்சி ஒன்றை அண்மையில் தொடங்கினார்.

ஹைட்ரோ கார்பன்
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மாதவன், தான் தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான போராட்டத்திலும் பங்கேற்றவன் என்று தெரிவித்தார். அதுவும் நெடுவாசலில் நடந்து கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தான் பங்கேற்றவன் என்று கூறினார்.

இந்தி எதிர்ப்பு
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை மாதவன் கண்டித்துள்ளார். இது தொடர்பாகவும் அவர் போராட்டம் நடத்தியதாகவும், இந்தியை கடுமையாக எதிர்த்ததாகவும் செய்தியாளர்களிடம் மாதவன் தெரிவித்தார்.

சசியுடன் தொடர்பு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா கட்சியின் பொது செயலாளர் சசிகலாவுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மாதவன் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக தன் மீது உள்ளது என்றும் அதனை தொடர்ந்து தான் மறுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பணம் வாங்க வில்லை
சசிகலா உறவினர்களான தினகரன், பாஸ்கரன் ஆகியோரிடம் இருந்து தான் எந்தப் பணத்தையும் வாங்கவில்லை என்று மாதவன் அடித்துக் கூறினார். ஒரு பொய்யை 100 தடவை சொன்னால் அது உண்மையாகிவிடாது. இதனை நிரூபிக்க வேண்டியது என்னுடைய கடமை என்றும் மாதவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications