தினகரனுக்கு திகார் சிறை நிலாச்சோறு - பூஞ்சோலை: நாஞ்சில் சம்பத் குபீர்!
தினகரன் சிறையில் சிரித்துக்கொண்டுதான் உள்ளார். அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை அவர் சட்டபடி எதிர்கொண்டு வெற்றி பெறுவார் என மதுரையில் நாஞ்சில்சம்பத் கூறியுள்ளார்.
மதுரை: தினகரன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை அவர் தைரியமாக சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவார் என அதிமுக தினகரன் கோஷ்டி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தினகரன் கோஷ்டி ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ சாமி,கர்நாடக அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி ஆகியோர் கண்டனக் கூட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில்சம்பத்,'' தினகரனுக்கு சிறை என்பது நிலாச் சோறு. அங்கு அவர் சிரித்தபடிதான் இருக்கிறார். அடக்குமுறை, ஆபத்து, அறைகூவல் அனைத்தையும் எதிர்கொண்டுதான் ஒரு தலைவன் உருவாகுவான். அப்படியான தலைவராக தினகரன் இருக்கிறார்.
அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை அவர் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொண்டு வெற்றி பெறுவார். தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்காது'' எனக் கூறினார்.
தினகரன் இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான நாளில் இருந்து தினகரனுக்காக நாஞ்சில் சம்பத் ஆவேசமாகக் குரல் கொடுத்து வருகிறார்.
இதற்காக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அவர் மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட போதும் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தினகரனுக்காக பேசி வருகிறார். தினகரனுக்காக பொதுவெளியில் பேசும் ஒரே குரலாக அவர் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.