மாணவனுடன் மாயமான டுட்டோரியல் ஆசிரியை.. இஷ்டப்படி வாழ கோர்ட் அனுமதி!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து மாணவருடன் சென்ற ஆசிரியை செபாஸ்டின் சாரதி கோர்ட்டில் ஆஜர் ஆனார். விசாரணைக்குப் பின்னர் மாணவனும், ஆசிரியையும் தங்களது விருப்பப்படி வாழத் தடையில்லை என்று கோர்ட் கூறி விட்டது.
திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் தேவராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. அவருடைய மகள் செபாஸ்டின் சாரதி. ஆசிரியை பயிற்சி முடித்துள்ள இவர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் டுட்டோரியல் கல்லூரியில் வேலை செய்து வந்தார்.
அந்த கல்லூரியில் திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடியை சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் படித்தார். அவருக்கு ஆசிரியை செபாஸ்டின் சாரதி பாடம் நடத்தினார்.
அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திடீரென மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் செபாஸ்டின் சாரதியின் தந்தை தேவராஜ் புகார் செய்தார். அதன்பேரில் ஆசிரியையை கடத்தி சென்று விட்டதாக அந்த மாணவர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.
இந்த நிலையில் செபாஸ்டின் சாரதியும் அந்த மாணவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி கிராமத்தில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் திண்டுக்கல் 1 ஆவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தான் விருப்பப்பட்டு மாணவருடன் சென்றதாகவும் செபாஸ்டின் சாரதி கூறினார். மேலும் தனது விருப்பப்படி சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து அவரது விருப்பப்படி வாழ்வதற்கு நீதிபதி வேதகிரி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அந்த மாணவருடன் ஆசிரியை செபாஸ்டின் சாரதி அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேபோல மாணவனுடன் மாயமானா நெல்லை ஆசிரியை கோதை என்ன ஆனார், எங்கே போனார் என்பது இதுவரை தெரியவில்லை என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications