தமிழக அரசு யாருக்கான அரசு என்று இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் : மாணவர்களின் கனவை நசுக்கவே நீட் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், இந்த அரசு யாருக்கான அரசு என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வால் மருத்துவ கனவு நொறுங்கிய மாணவி அனிதா தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். மாணவி அனிதாவின் உடலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : சமமற்ற இந்த தேசத்தில் எளிய மக்களின் படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எல்லா மட்டங்களிலும் இந்த நிலை தான் இருக்கிறது. சமூகம், அரசியல், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் அனைத்திலும் உரிமை மறுக்கப்படுகிறது.

அத்தனை முயற்சி செய்தாரே
அந்தக் குழந்தையின் கடைசி நிமிடங்கள், படிப்பிற்காக அவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறார். ஐஐடியில் எப்படி ஏழை மாணவர்கள் நுழைய முடியாதோ அது போலத் தான் நீட் என்ற ஒன்றை புகுத்தி, மருத்துவ படிப்புகளிலும் புகுத்துகின்றனர்.

யாருக்காக இந்த அரசு
இந்த அரசு யாருக்காக இருக்கிறது. சாவு நோக்கி அந்தப் பெண் தள்ளப்பட்ட நிலைக்கு யார் காரணம். இந்த சமூகத்தில் படிப்பதற்குக் கூட வழியில்லை என்பதால் தான் கடைசியில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த வலியை எல்லா போராட்ட இயக்கத்தினரும் முன்எடுக்க வேண்டும். நீட் தேர்விற்கு எதிராக போராடி தடையை பெற வேண்டும்.

சுவாதி கொலைக்கு எழுந்த எழுச்சி இதற்கு இல்லையே
சுவாதி படுகொலைக்கு எழுந்த எழுச்சி அனிதா படுகொலைக்கு இல்லை. இது தற்கொலை இல்லை, படுகொலை தான். எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன, இதைத் தவிர மோசமான சம்பவம் தேவையா?

மாநில அரசின் தவறு
நீட் இருக்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்தாதது தான் மாநில அரசின் தவறு. மாநில அரசு தீர்க்கமாக முடிவு எடுத்திருந்தால், இந்த மாணவி மரணம் நடந்திருக்காது. தமிழக மாணவர்களின் மனநிலை என்னவென்பது மாநில அரசுக்கு தெரியாதா, எங்கே போனது மாநில சுயாட்சி, செயல்படாத அரசின் வெளிப்பாடாகவே இதை நான் பார்க்கிறேன்.

சாதி, சேரியை மறந்தால்தான் உரிமை கிடைக்கும்
சாதி, சேரி என்பதை மறந்து நாம் தமிழர்கள் என்று ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறோமே அப்போது தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் கிடைக்கும். தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து என்னுடைய களத்தில் போராடுவேன், என்று ரஞ்சித் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications