முதல்வர் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள்!
முதல்வர் வீட்டு முன்பு திடீர் சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகளைக் காவல்துறை கைது செய்தது.
சென்னை: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன்பு மாற்றுத்திறனாளிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. அங்கு நேற்று இரவு வந்த ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரி மாற்றுத்திறனாளிகள் சிலர், முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், காலையில் தலைமைச் செயலகம் சென்று மனு அளியுங்கள். தற்போது இங்கு அளிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
இதை ஏற்காத மாற்றுத்திறனாளிகள் முதல்வர் வீட்டின் முன்பு அமர்ந்து திடீர் கோஷமிடத்துவங்கினர். இதனையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இன்று காலை மீண்டும் மாற்றுத்திறனாளிகள் அங்கு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அங்கிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications