தங்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை தேடி தர வேண்டும்... பிவி சிந்துக்கு விஜயகாந்த் வாழ்த்து!
சென்னை: ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ள இந்திய வீராங்கனை பிவி சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் நோசோமி ஓகுஹராவும் மோதினர். இதில் அபாரமாக விளையாடிய பிவி சிந்து, ஜப்பான் வீராங்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிட்டது.
ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 58 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத் நிலையில், பிவி சிந்து அடுத்த பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் பிவி சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற பிவி சிந்து அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கப்பதக்கம் வென்று நம் தாய்நாட்டிற்கு பெருமை தேடி தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்திருக்கும் பி.வி.சிந்து தங்களுடைய சென்னை ஸ்மாஷர்ஸ் டீமில் விளையாடியவர் என்று பெருமிதம் கொள்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.