நாளை சென்னை வரும் விஜயகாந்த் கைது செய்யப்படமாட்டார்... பிடிவாரண்ட் ரத்து செய்தது ஹைகோர்ட்!
சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டிற்கு தடை கேட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஹைகோர்ட்டி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை : செய்தியாளரை தாக்கிய வழக்கில் ஆலந்தூர் நீதிமன்றம் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு பிறப்பித்த பிடிவாரண்ட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2013ம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் கேள்வி கேட்ட செய்தியாளரை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தாக்கியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் பல முறை ஆணை பிறப்பித்தும் ஒரு முறை கூட விஜயகாந்த் ஆஜராகாததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அப்போதும் விஜயகாந்த் ஆஜராகாததால் அவருக்கு வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிடியாணையை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவித்தும் அதனை ஏற்காமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் விஜயகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ரமேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதை ஏற்காமல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விஜயகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது. நாளை விஜயகாந்த் சென்னை வரும் நிலையில் சென்னை விமான நிலைய போலீசார் அவரை கைது செய்ய தயாராகி வருவதால் அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து விஜயகாந்த் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் எந்த தடையும் இன்றி நாளை சென்னை வரலாம், அவர் கைது செய்யப்பட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.