சட்டசபைய கூட்டினால் தானே அதிமுகவோட வண்டவாளம் தெரியும்... விஜயகாந்த் 'லந்து'
சட்டசபையை கூட்டினால் தான் அதிமுகவினரின்வண்டவாளம் தெரியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னர் நிச்சயம் சட்டசபை தேர்தல் வரும் அதில் நிச்சயம் தேமுதிக ஆட்சியில் அமர்வது உறுதி, உறுதி, உறுதி என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியிருந்தது தொண்டர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. இப்படியே போனால் கட்சியை வளர்ப்பது கஷ்டம் தான் என்று வெளிப்படையாகவே புலம்பி வந்தனர்.
இந்நிலையில் விஜயகாந்த் தமிழக அரசியல் நிலவரம் குறித்த பளீச் பேட்டியளித்துள்ளார், இது தொண்டர்களை திக்குமுக்காடிப் போகச் செய்துள்ளது.
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டில் மக்கள் நிறைய எதிர்பார்த்தார்கள், அதை மக்களுக்கு செய்யவில்லை. இது என்னுடைய கருத்து இல்லை மக்களின் கருத்து என்று கூறியுள்ளார்.

அக்கறையில்லை
மாட்டிறைச்சிக்காக விதிக்கப்பட்ட தடை குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்ததாக இருப்பது கண்டனத்திற்குரியது. பட்டினியால் வாடும் மக்களுக்கு அரசு பதில் சொல்லவில்லை. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யாமல், விவசாயிகளை வஞ்சிக்கிறது மத்திய அரசு. ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் தமிழகத்திலேயே ஏன் எல்லா திட்டங்களையும் கொண்டு வருகிறார்கள், ஹைட்ரோகார்கன் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள், நெசவாளர்களின் நலன் நன்றாக இருந்தால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும்.

தேமுதிக வளரவில்லையா?
தமிழகத்தில் தேமுதிக வளரவில்லை என்று சொல்வது திமுக, அதிமுகவின் பொய்ப்பிரச்சாரம். என்னுடைய கட்சியில் இருந்து எத்தனை பேரை இழுத்தாலும் நான் அசராமல் நிற்கிறேன் என்பதிலேயே என் பலம் தெரியும். அதுமட்டுமல்ல இங்கிருந்து சென்றவர்களை திரும்பி தாயுள்ளத்துடன் அணைத்துக் கொள்கிறேன்.

ஆட்சிக்கு வருவோம்
வறுமை,ஊழல் லஞ்சம் என்பதே எனது கட்சியின் கொள்கை அதில் எந்த மாற்றமும் இல்லை. நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னர் சட்டமன்றத் தேர்தல் வரும் அந்தத் தேர்தலில் தேமுதிக நிச்சயமாக வெற்றி பெற்று ஆட்சியில் அமரும். ஏதேதோ கட்சி வரும் என்று சொல்கிறார்கள் ஆனால் பாருங்கள் தேமுதிக நிச்சயம் ஆட்சிக்கு வரும்.

கூட்டணி பத்தி இப்போ என்னா?
எப்போதுமே தேமுதிக தனிக்கட்சி தான் தேர்தல் சமயத்தில் மக்களின் முடிவைக் கேட்டு முடிவு எடுப்பேன். முன்னாடியே கூட்டணின்னு சொல்லி அப்புறம் சின்ன சின்ன பிரச்னையா வந்து விலகி அந்தப் பிரச்னைய பெரிது படுத்துவாங்க இதெல்லாம் தேவையா, தேர்தல் சமயத்தில் அதற்கேற்ப முடிவெடுப்பேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications