நல்லா ஆடட்டும்...இன்னும் 6 மாதம் தான்...விஜயகாந்த் சாபம்
ஈரோடு: அதிமுகவினர் எவ்வளவு வேண்டுமானாலும் ஆட்டம்போட்டு கொள்ளட்டும். அவர்களுடைய ஆட்சி இன்னும் 6 மாதத்தில் முடிந்துவிடும். ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் இத்தோடு முடிந்துவிடும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் ‘மக்களுக்காக மக்கள் பணி' என்ற பெயரில் மாவட்டந்தோறும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தேமுதிக நடத்தி வருகிறது.
அந்தவகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழைப்பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது விழா மேடையில் அவர் பேசியதாவது:-

மழையில் கரைய மாட்டோம்...
இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகின்றபோது மழை வருவதுபோன்று தோன்றுகிறது. மழையில் நனைந்தால் எதுவும் ஆகிவிடாது. நாம் கரைந்துபோய் விடமாட்டோம். நானும் உங்களோடு மழையில் நனைவதற்கு தயாராக இருக்கிறேன்.

நிறைய பேச வேண்டும்...
உங்களிடம் நிறைய பேச விரும்புகிறேன். ஆனால் இங்கு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கோபிசெட்டிபாளையம் பகுதி நிர்வாகிகள் பல இடையூறுகளை அனுபவித்ததாக தெரிவித்தீர்கள். நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இன்னும் 6 மாதம் மட்டுமே...
அதிமுகவினர் எவ்வளவு வேண்டுமானாலும் ஆட்டம்போட்டு கொள்ளட்டும். அவர்களுடைய ஆட்சி இன்னும் 6 மாதத்தில் முடிந்துவிடும். ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் இத்தோடு முடிந்துவிடும். கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஒரு சீட்டுகூட கிடைக்கவில்லை. அந்த நிலை மீண்டும் வரும். அதோடு ஜெயலலிதா இரண்டு முறை சிறை சென்றுள்ளார். அடுத்த முறை சிறைக்கு போனால் திரும்பி வர மாட்டார்.

கோவன் கைது விவகாரம்...
இப்போது ‘மூடு டாஸ்மாக்கை மூடு‘ என்கிற பாடல் தமிழக மக்களிடம் பிரபலமாகி விட்டது. அந்த பாடலை பாடிய கோவனை கைது செய்து பாடலை பிரபலப்படுத்திவிட்டனர். அவரை கைது செய்ததை சுப்ரீம் கோர்ட்டே தவறு என்று கூறி உள்ளது.

நான் அஞ்ச மாட்டேன்....
என் மீது பல்வேறு பகுதிகளில் வழக்குகள் போடப்படுகின்றன. இதை அனைத்து மாவட்டத்திலும் போட்டாலும் நான் அஞ்சமாட்டேன்.

நான் எதிர்க்கட்சித் தலைவர்...
நான் எதிர்க்கட்சியின் தலைவன். எந்த கொள்ளையும் அடிக்கவில்லை. மக்கள் மன்றத்தில் நான் எதைப்பேச வேண்டுமோ? அதை பேசுகிறேன்.

தேர்தல் நேரம்..
இது தேர்தல் நேரம். நீங்கள் என் மீது வழக்கு போடுவதாக இருந்தால் அந்த வழக்குகளை சந்திப்பதற்காக வருகின்ற நிகழ்ச்சிகளையே தேர்தல் பொதுக்கூட்டங்களாக என்னால் மாற்ற முடியும்.

காலம் மாறி விட்டது...
அதிமுகவும், திமுகவும் கூட்டணிக்காக மாறி மாறி பேசுகிறார்கள். திமுக கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்று கருணாநிதி கூறுகிறார். ஏன் நாங்கள் தான் உங்களிடம் வரவேண்டுமா? நீங்கள் இறங்கி வரமாட்டீர்களா? உங்களை தேடி வந்த காலங்கள் எல்லாம் மாறிப்போய் விட்டது

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்...
அதிமுக, திமுக 2 பேரும் மாறி மாறி ஏமாற்றியதை மக்கள் புரிந்துகொண்டார்கள். ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே', என்று மலைக்கள்ளன் படத்தில் வரும் பாடல் தற்போது நினைவுக்கு வருகிறது' என இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications