கரைகிறது விஜயகாந்த் கட்சி.. கமலா, ரஜினியா என கணக்கு பார்க்கும் தேமுதிக நிர்வாகிகள்
சென்னை: விஜயகாந்த்தின் தேமுதிக கரையத்தொடங்கியுள்ளது. எந்த கட்சிக்கு போவது என தெரியாமல் விழித்துக்கொண்டுள்ளார்கள் நிர்வாகிகள்.
மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் விஜயகாந்த் மனைவி பிரேமலதா. ' கட்சியில் சேருவதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்திக் கொள்ள கமல்கூட விரும்புகிறார்.
'ஜெயலலிதாவுக்கு இணையாக வளர்வோம்' என நம்பியிருந்த பிரேமலதாவின் எண்ணமும் ஈடேறவில்லை' என்கின்றனர் தே.மு.தி.க தொண்டர்கள்.

விஜயகாந்த் பிரச்சினை
சிறுநீரகக் கோளாறு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து விலகிவிட்டார் விஜயகாந்த். எப்போதாவதுதான் அவரைப் பொதுமேடைகளில் பார்க்க முடிகிறது. நோயின் தீவிரத்தன்மை காரணமாக, அவரால் தெளிவாகப் பேச முடிவதில்லை. வீட்டிலேயே 'ஸ்பீச் தெரபி' கொடுத்து வருகிறார்கள்.

சிறுநீரக சிகிச்சை
வாரம் இரண்டு முறை சிறுநீரகம் தொடர்பான சிகிச்சைகளை எடுத்து வருகிறார். 'சிங்கப்பூர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்' என்ற கோரிக்கையை, தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர் குடும்பத்தினர். அண்மையில் கதிராமங்கலத்தில் நடந்த கூட்டத்திலும், விஜயகாந்த்தால் தெளிவாகப் பேச முடியவில்லை.

பிரேமலதா வேண்டுகோள்
இதுகுறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகி ஒருவர், " கட்சித் தேர்தலை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். உள்கட்சி தேர்தலை நடத்துவது மிக முக்கியமானது. ஆனால், அதற்கான வேலைகளில் கட்சித் தலைமை ஆர்வம் செலுத்தவில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பிரேமலதா, ' மாவட்டம்தோறும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள். தொடர்ச்சியாக மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்துப் போராடுங்கள்' எனப் பேசினார். அவரது பேச்சை நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அரியணையை பிடித்திருக்கலாம்
' தற்போதுள்ள சூழலில் பழைய கேப்டனாக இருந்திருந்தால், அவர் எதிர்பார்த்தபடி அரியணையை எட்டிப் பிடித்திருப்பார். மக்கள் நலக் கூட்டணியின் தோல்விகளும் கேப்டனின் உடல்நலக் கோளாறும் தே.மு.தி.க என்ற கட்சியை மறக்கடிக்க வைத்துவிட்டன. அடுத்த தலைவராக, பெயர் சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை. கட்சியில் சேர உறுப்பினர் படிவத்தை வாங்கக்கூட ஆள் இல்லை.

ரஜினியா, கமலா
ரஜினியா? கமலா என்றுதான் பல நிர்வாகிகளும் கணக்கு போடுகின்றனர். அரசியல் சூழல்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. பொதுக்கூட்டத்துக்காக கைக் காசைப் போட்டு செலவு செய்யும் நிலையிலும் கட்சிக்காரர்கள் இல்லை. சட்டமன்றத் தேர்தலின்போது, ' உங்களைத் தேடி பணம் வரும். வட்டிக்குப் பணம் வாங்கி பிரசாரம் செய்யுங்கள்' என உத்தரவிட்டார் கேப்டன். தேர்தல் முடிந்து ஓராண்டு ஆகிவிட்டது. இன்னும் எங்களுக்குப் பணம் வரவில்லை. கடன்காரர்களாக அலைந்து கொண்டிருப்பவர்கள்தான் அதிகம்.

சண்டைகள்
இந்த விவகாரம் தொடர்பாக, கரூர் வேட்பாளர் ஒருவர் தலைமைக் கழகத்திலேயே வந்து சண்டையிட்டார். ஊரே வேடிக்கை பார்த்ததால், அவருக்கு மட்டும் பணம் செட்டில் ஆனது. இதன்பிறகு நிர்வாகிகள் உஷார் ஆகிவிட்டார்கள். ' தலைமை பணம் கொடுத்தால் கூட்டம் போடுவோம்' என வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இதனை எப்படி சரிசெய்வது என்ற கவலையும் அவர்களுக்கு இல்லை. கேப்டனின் உடல்நிலையை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது" என்றார் விரிவாக.












Click it and Unblock the Notifications