சென்னை உண்ணாவிரதத்தில் செல்வி, துர்கா ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு
சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வி, ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை: சட்டசபையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வி, ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது சனிக்கிழமையன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திமுக தரப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
கிழிந்த சட்டை
இதை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். இதனால் திமுகவினர் சட்டசபைக்குள் போராட்டம் நடத்தினர். அப்போது சட்டசபை மார்ஷல்கள் சீருடையை அணிந்திருந்த போலீஸ் அதிகாரிகள் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களை கடுமையாக தாக்கி வெளியேற்றினர். இதில் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது.
திருச்சியில் ஸ்டாலின்
இத்தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். திருச்சி உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
துர்கா ஸ்டாலின்
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் கருணாநிதியின் மகள் செல்வி, மகன் மு.க. தமிழரசு, ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உதயநிதி
ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் குடும்பம் குடும்பமாக இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.