கருணாநிதிக்காக விடிய விடிய ராஜாஜி ஹாலில் காத்திருந்த திமுகவினர்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இறுதியாக தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான திமுகவினர் விடிய விடிய ராஜாஜி ஹாலில் காத்திருந்தனர்.
நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதி காலமானார். அவரது உடல் கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி இல்லங்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கூடி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தற்போது ராஜாஜி ஹால் நோக்கி கருணாநிதி உடல் வந்துகொண்டுள்ளது.

ராஜாஜி ஹாலில் நேற்று மாலையிலிருந்தே ஏற்பாடுகள் செய்யத் தொடங்கி விட்டனர். விளக்குகளை பொருத்துவது, சிவப்பு கார்பெட் விரிப்பது ஆகிய பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகளின்போதே பெரும் திரளான திமுகவினர் அங்கு குவியத் தொடங்கி விட்டனர். தங்களது தலைவரை கடைசியாக வெகு அருகே பார்த்து விட வேண்டும் என்பதற்காக நேற்று இரவே திமுகவினர் அங்கு குவிய ஆரம்பித்து விட்டனர்.
விடிய விடிய அவர்கள் ராஜாஜி ஹாலில் காத்துக் கிடந்தனர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் இதே ராஜாஜி ஹால் படிக்கட்டு வளாகத்தில்தான் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டனர். அதே இடத்தில்தான் தற்போது கருணாநிதி உடலும் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கருணாநிதிக்கு இங்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications