கருணாநிதியின் சமாதியில் விடிய விடிய அஞ்சலி செலுத்திய திமுக தொண்டர்கள்
சென்னை: கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திமுக தொண்டர்கள் விடிய விடிய கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதிக்கு வரும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கை நேற்று அதிகரித்த வண்ணம் இருந்தது.
திமுகவினர் தவிர்த்து பொது மக்களும் அதிக அளவில் வந்தனர். கூட்டம் அதிகமானதால் கருணாநிதி சமாதி இருக்கும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மக்களை வரிசையில் நிற்கச் சொல்லி அஞ்சலி செலுத்த அனுப்பினார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கருணாநிதியின் சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நேற்று காலை 11. 41 மணி அளவில் சமாதிக்கு வந்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு யாரையும் பார்க்காமல் சோகமாக கிளம்பிவிட்டார். சில தொண்டர்கள் சமாதி அருகே மொட்டை அடித்தனர். பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தியதை பார்க்க முடிந்தது.
இரவு 7. 15 மணி அளவில் கருணாநிதியின் குடும்பத்தார் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தொண்டர்கள் விடிய விடிய கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். ஒரு சமயத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். சமாதிக்கு ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.