கறார் கருணாநிதி, விடாப்பிடி ஸ்டாலின்.. திமுக வேட்பாளர் பட்டியல் கடைசி நேர களேபரம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடுவே ஏற்பட்ட பனிப்போரால்தான், அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
வேட்பாளர் பட்டியல் நேற்று காலை வெளியாக வேண்டிய நிலையில், மாலையில்தான் வெளியானது. இதன் பின்னணியில் கட்சிக்குள் நடந்த சில களேபரங்கள்தான் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

ஸ்டாலின் ஆதரவாளர்கள்
தமிழகம் முழுவதும், மூன்று கட்டமாக சர்வே நடத்தி, வேட்பாளர் பட்டியலை தயார் செய்து கொடுத்தது, ஸ்டாலின் மருமகன் குழு என்று கூறப்படுகிறது. எல்லா கோஷ்டியினருக்கும் உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக்கொண்டிருந்தாலும்கூட, அந்த பட்டியலில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு தரப்பட்டிருந்ததாம்.

சூடான வாதம்
இதனால் குடும்பத்திற்குள் கலகக்குரல் எழுந்துள்ளது. எனவே, வேட்பாளர்கள் பட்டியலில் கருணாநிதி மாற்றம் செய்து கொண்டு அந்த பட்டியலை காலையில் வெளியிட ஆயத்தமானாராம். இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின் கோபாலபுரம் வந்து, கருணாநிதியிடம் பட்டியல் மாற்றத்தில் தனக்கு சம்மதம் இல்லை என சூடாக கூறியதாக கூறப்படுகிறது.

காலையில் வெளியாகவில்லை
வாக்குவாதம் காரணமாக, கருணாநிதியிடம் கோபித்துக் கொண்டு, கோபாலபுரத்தில் இருந்து, வீட்டுக்கு போய் விட்டார் ஸ்டாலின். அறிவாலயத்திற்கு ஸ்டாலின் வராததால் வேட்பாளர் பட்டியலை வெளியிட கருணாநிதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.

பல்லாவரம் பல்லாங்குழி
ஸ்டாலின் மிகவும் கறார் காட்டிய தொகுதி பல்லாவரம் ஆகும். கருணாநிதி தனது உதவியாளர் நித்தியானந்தாவின் சிபாரிசை ஏற்று, பல்லாவரம் முன்னாள் நகரசபை தலைவர் இ.கருணாநிதியை வேட்பாளராக்க, முடிவு செய்திருந்தார். ஸ்டாலினோ, தன் ஆதரவாளர் தா.மோ.அன்பரசனை வேட்பாளராக்க முயல, இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு வெடித்தது.

வாக்குவாதம்
முன்னாள் அமைச்சரான அன்பரசன் செயல்பாடு பிடிக்கவில்லை என நான் கூறிய பின்னரும்கூட, அன்பரசனை மாவட்ட செயலர் ஆக்கினாய். தேர்தலில் போட்டியிட சீட் வேண்டாம் என்று அப்போது அன்பரசனிடம் எழுதி வாங்கப்பட்டது. எனவே இப்போது எதற்கு அவருக்கு சீட் வழங்க வேண்டும்? என கருணாநிதி ஸ்டாலினிடம் கேட்டுள்ளார்.

ஸ்டாலின் கறார்
ஆனால், ஸ்டாலினோ, சீட் வேண்டாம் என்று எழுதி கொடுத்த உங்கள் ஆதரவாளர்களில் எத்தனையோ பேருக்கு நீங்கள் சீட் கொடுத்துள்ளீர்கள். அன்பரசனுக்கும் தரலாம் என்று ஸ்டாலின் கறார் காட்டியுள்ளார். இதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்ததால்தான் ஸ்டாலினுக்கு அதிக கோபமாம்.

காத்திருந்து, காத்திருந்து
இதற்கிடையில், அறிவாலயத்தில், வேட்பாளர் வெளியிடும் நிகழ்ச்சிக்காக, பல மாவட்ட நிர்வாகிகளும் காலையில் இருந்தே காத்திருந்தனர், நிருபர்களும் சென்றிருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் நேரு, பிச்சாண்டி, மாவட்ட செயலர் தூத்துக்குடி பெரியசாமி உள்ளிட்ட பலரும், கருணாநிதி, ஸ்டாலின் வருகைக்காக காத்திருந்தனர். அவர்கள் வராததால் கலையத் தொடங்கினர்.

கனிமொழி சமரசம்
இதற்கிடையில், நடந்த விஷயம் கேள்விப்பட்டு, கனிமொழி, கோபாலபுரம் வந்தார். அவரிடம், துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராஜா, பொன்முடி ஆகியோரை வர சொன்னார், கருணாநிதி. அவர்கள் வந்ததும், கருணாநிதியுடன் அமர்ந்து, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தனர்.

போனில் ஒப்புதல்
பட்டியிலில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, ஆழ்வார்பேட்டையில் இருந்த ஸ்டாலினிடம் போனில் பேசிப் பேசி ஒப்புதல் பெற்றனர்.இப்படி தயார் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலே, மாலை வெளியாகியுள்ளது. எப்படியோ, கருணாநிதி, பல்லாவரத்தில் கருணாநிதிக்கே சீட் பெற்றுக்கொடுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications