ஆலங்குடி திமுக வேட்பாளர் சதீஷ் மாற்றம்: அதிருப்தியாளர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது தலைமை
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி திமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆலங்குடி திமுக வேட்பாளர் சதீஷுக்கு பதிலாக சிவ.மெய்யநாதன் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது. வேட்பாளரை மாற்றக்கோரி அதிருப்தியாளர்கள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு கட்சித்தலைமை பணிந்துள்ளது.
மே 16ம் தேதி தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டது. அறிவிக்கப்பட்ட பல வேட்பாளர்களுக்கு திமுகவினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் ஜி.சதீஷ் அறிவிக்கப்பட்டார். இதற்கு கடும் அதிருப்தி கிளம்பியது. சதிஷுக்கு பதிலாக திமுக ஒன்றியச் செயலாளரும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான சிவ.வீ. மெய்யநாதனை வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் கடந்த 14ம் தேதி ஆலங்குடியில் திமுக கரை வேட்டிகளை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினசரியும் கீரமங்கலம், கொத்தமங்கலம், திருவரங்குளம், வடகாடு போன்ற இடங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், குளமங்கலத்தில் திமுக கிளைச் செயலாளர் பாண்டிக்குடி சேகர் தலைமையில் அக்கட்சியினர் நேற்று திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த திமுகவினர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜி.சதீஷ், இந்த போராட்டத்தால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார் எனினும், மெய்யநாதனிடம் கட்சியின் தலைமை பேசியுள்ளது. நாங்களும் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவர் சமாதானம் அடைந்துவிடுவார். எனக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பார் என்றும் சதீஷ் தெரிவித்தார்.
நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் இன்று ஆலங்குடி திமுக வேட்பாளதை அதிரடியாக மாற்றியுள்ளது கட்சித்தலைமை. ஆலங்குடி திமுக வேட்பாளர் சதீஷுக்கு பதிலாக சிவ.மெய்யநாதன் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அரக்கோணம், ஒரத்தநாடு, விருத்தாசலம் தொகுதி வேட்பாளர்களையும் திமுக மாற்றி வேறு வேட்பாளர்களை அறிவித்தது. இதனிடையே அணைக்கட்டு தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரியும், பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரியும் திமுகவினர் மொட்டையடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிருப்தியாளர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த தொகுதி வேட்பாளர்களும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications