பணம் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்து! அறிவாலயத்தின் கோபப்பார்வையில் அடுத்த திமுக மாவட்டச் செயலாளர்!
தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ. மீதும் அறிவாலயத்தின் கோபப்பார்வை படத் தொடங்கியுள்ளது.
இதற்கு காரணம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது சங்கரன்கோவிலை சேர்ந்த இளம் கவுன்சிலரான சரவணன் என்பவர், தனக்கு நகராட்சி துணைத் தலைவர் பதவியை எதிர்பார்த்து சிவபத்மநாதனையும், ராஜா எம்.எல்.ஏ.வையும் சந்தித்து அவர்கள் கேட்டதன் அடிப்படையில் பல லட்சங்களை சொத்துக்களை விற்று அள்ளிக்கொடுத்திருக்கிறார்.

கடைசியில் நகராட்சி துணைத் தலைவர் பதவி வேறு நபருக்கு கொடுக்கப்பட்டதால் தாம் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு அந்த கவுன்சிலர் சிவபத்மநாதன் வீட்டுக்கும், ஈ.ராஜா எம்.எல்.ஏ. வீட்டுக்கும் நடையாய் நடந்திருக்கிறார். அதில் சிவபத்மநாதன் மட்டும் சில மாதங்களுக்கு முன்பே வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து செட்டில் செய்து பிரச்சனையை முடித்து வைத்திருக்கிறார்.
ஆனால் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜா கொடுக்கல் வாங்கல் விவகாரத்தை சுமூகமாக முடிக்காமல் நாட்களை இழுத்தடித்து வந்திருக்கிறார். இதையடுத்து இது குறித்த பஞ்சாயத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து பணம் விவகாரத்தில் எந்த வில்லங்கமும் வேண்டாம் என உதயநிதியின் உதவியாளர் செந்தில், ராஜாவுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரம் உதயநிதி வரை சென்றுவிட்டதே என்ற ஆத்திரத்தில் இருந்த ராஜா எம்.எல்.ஏ. கவுன்சிலர் சரவணனை கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று கீழே தள்ளி அடிக்கப் பாய்ந்ததாக தெரிவிக்கிறார்கள் அவர்கள் இருவருடனும் பழகிய உள் விவரம் அறிந்தவர்கள். அந்த கவுன்சிலர் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் விவகாரம் வில்லங்கமானது. கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் அடிக்க வருவீரோ என தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக முதலியார் சமூகத்தினர் கொந்தளித்திருக்கின்றனர்.
நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த ராஜா எம்.எல்.ஏ. கடைசியாக தாம் வாங்கிய பணத்தை கவுன்சிலர் சரவணனிடம் திருப்பிக் கொடுத்து சமாதான கொடியை பறக்கவிட்டுள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தால் கட்சித் தலைமையின் கோபப்பார்வை அவர் மீதும் படத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications