கருணாநிதியின் 91வது பிறந்தநாள்: நாளை முதல் 3 நாட்கள் கொண்டாட்டம்!!
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்தநாளை நாளை முதல் 3 நாட்கள் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மகளிரணி,இலக்கியஅணி, இளைஞர் அணி சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம் என கோலாகலமான நிகழ்ச்சிகளால் ஜூன் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை களைகட்டப்போகிறது அண்ணா அறிவாலயம்

லியோனி பட்டிமன்றம்
ஜூன் 1ம் தேதி தி.மு.க. மகளிர் அணி சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

அரசியலா? இலக்கியமா?
மகளிருக்கு உரிமை கிடைக்க கலைஞருக்கு பெரிதும் துணை நிற்பது அரசியல் பணியா? இலக்கிய பணியா? என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்தில் இந்திரகுமாரி, கஞ்சனா கமலாநாதன், விஜயா தாயன்பன், ராஜம்ஜான், திருவாரூர் விஜயகுமாரி, பவானி ராஜேந்திரன், சங்கரி நாராயணன், வசந்தி ஸ்டான்லி உள்பட பலர் பங்கேற்று பேசுகிறார்கள்.

இலக்கிய அணி
1-ந் தேதி மாலை 5 மணிக்கு தி.மு.க. இலக்கிய அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் விழா நாதசுர இசையுடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழ் அறிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு ரூ.10 ஆயிரம் அடங்கிய கலைஞர் இலக்கிய பொற்கிழியும் கேடயமும் வழங்கப்படுகிறது.

அரசியல்களமா? பகுத்தறிவு களமா?
இரவு 7 மணிக்கு கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அரசியல்களமா? பகுத்தறிவு களமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. செல்வகணபதி பட்டி மன்ற நடுவராக இருக்கிறார். கோவி.செழியன், வசந்தி ஸ்டான்லி, ஈரோடு இறைவன், புதுக்கோட்டை விஜயா, சூரியா வெற்றி கொண்டான் உள்பட பலர் பேசுகிறார்கள்.

இளைஞர் அணி
2-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதில் திரைப்பட பாடகர்கள் பங்கேற்கும் தெம்மாங்கு தேனரங்கம், தமிழறிஞர்கள் பங்கு பெறும் வாழ்த்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது.

வைரமுத்து தலைமையில்
வாழ்த்தரங்குக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். சுப.வீர.பாண்டியன், திண்டுக்கல் லியோனி, சாரதா நம்பி ஆரூரன், மனுஷ்யத்தரன் உள்பட பலர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

நலத்திட்ட உதவிகள்
3-ந் தேதி தி.மு.க.தலைவர் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களும் நலத்திட்ட உதவிகளும் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications