காவிரி: தேவகவுடாவின் திடீர் காலவரையற்ற உண்ணாவிரதத்துக்கு திமுக, காங். கடும் கண்டனம்!
சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதற்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழகத்துக்கு இன்று முதல் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடிநீரை திறந்துவிட்டே ஆக வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடகா அரசோ வழக்கம் போல அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடும் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க கூடாது என்பதை வலியுறுத்தி முன்னாள் பிரதமர் தேவகவுடா பெங்களூருவில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தேவகவுடா அறிவித்துள்ளார்.
தேவகவுடாவின் இந்த போராட்டத்துக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணை பொதுச்செயலர் விபி துரைசாமி, தேவகவுடாவின் உண்ணாவிரதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனவும் சாடியுள்ளார்.
திருநாவுக்கரசர் கண்டனம்
இதேபோல் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் தேவகவுடாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தேவகவுடாவின் உண்ணாவிரதம் சட்டவிரோதமானது; பிரதமராக இருந்தவர் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது என்பது ஜனநாயக விரோதமானது என சாடினார்.