மீனவர் பிரச்சனை பற்றி பேச திமுக,காங்கிரசுக்கு என்ன அருகதை இருக்கிறது? பொங்கிய பொன்.ராதா கிருஷ்ணன்
காங்கிரஸ் - திமுகவுக்கு மீனவர்கள் நலன் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மீனவர் பிரச்சனை குறித்துப் பேச அருகதை இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
திமுக, காங்கிர்ஸ் கூட்டணியில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, எத்தனை முறை மீனவர்கள் பிரச்சனை குறித்து அக்கறையுடன் பேசி உள்ளனர்? திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதுதான் தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் என்ன செய்தனர்? அவர்கள் கட்சி எம்.பிக்கள் 12 பேர் மத்தியில் இருந்தனர். அவர்கள் மீனவர்களுக்காக என்ன குரல் கொடுத்தார்கள்.
மீனவர்களுக்குச் சொந்தமான 385 படகுகளை, இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ளது. அவற்றை மீட்பதற்கு இவர்கள் எந்த நடவடிக்கையும் செய்யவில்லை. பாஜக அமைச்சர்கள் நேரில் மீனவர்களை சந்தித்துப் பேசியுள்ளோம். எதிர்காலத்தில் மீனவர்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
மீனவர் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் மீனவர் நலன் குறித்துப் பேச எந்த அருகைதையும் இல்லை.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
முன்னதாகா மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமனும் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்ஜோ கொலையைக் கண்டித்து நடக்கும் போராட்டத்தில் மக்களைச் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.